பொட்டு சுரேஷ் கொலை உள்ளிட்ட 3 வழக்குகளில் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை உட்பட 3 வழக்குகளில் அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, மாரிமுத்து என்பவரின் காரை எரித்த வழக்கு, துரை தயாநிதியின் நண்பர் ராம்கி கொலை முயற்சி வழக்குகளில் ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி தீப்தி அறிவுநிதி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிந்த நிலை யில் அட்டாக் பாண்டியின் 3 ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அட்டாக் பாண்டி மீது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் தேர்தல் மோதல் வழக்கு, மதுரை பெருங்குடி காவல் சரகத்தில் வீரணன் என்பவருக்கு குவாரியில் மண் அள்ளிய வழக்கு, மாவட்ட குற்றப் பிரிவில், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய மறுத்து, வீட்டை தனக்கு விற்கு மாறு மிரட்டிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். ஜெயம் பைனான்ஸ் அதிபர் அசோக்கை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் முன்ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றாததால் அட்டாக் பாண்டிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி தனியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் வாதிடும்போது, அட்டாக் பாண்டி மீது 20 வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் முன்ஜாமீன் நிபந்தனையை அவர் நிறைவேற்றவில்லை. இந்த மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.