பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 60 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி
மதுரை: மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 60 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் 117 சாட்சிகள், 100 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராக இருந்த பொட்டு சுரேஷ் மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தனது வீடு அருகே கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அட்டாக் பாண்டி கூறியதாலேயே இந்த கொலையை செய்ததாக அவர்கள் கூறியதால் இந்த கொலை வழக்கில் அட்டாக்பாண்டி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
அட்டாக் பாண்டிக்கு தொடர்பு
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் மதுரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் இரண்டுமுறை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
மும்பையில் கைது
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இவ்வழக்கில் சுப்பிரமணியபுரம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்ததால் குற்றப்பத்திரிகையை கோர்ட்டு ஏற்க மறுத்தது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த அட்டாக் பாண்டியை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.
சிபிசிஐடி விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சுப்பிரமணியபுரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அட்டாக் பாண்டி கைதான 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத பட்சத்தில், ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகலாம் என போலீசார் கருதுகின்றனர்.
எட்டு இன்ஸ்பெக்டர்கள் விசாரணை
இதனால் டிசம்பர் 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சிபிசிஐடி போலீஸ் ஆளாகியுள்ளது. இதனால் இவ்வழக்கை விசாரிக்க எட்டு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்களை சேகரிக்க வேண்டும். அதுவரை பிற பணிகளில் கவனம் செலுத்தக்கூடாது' என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
முக்கிய ஆதாரங்கள் சிக்கின
எனவே, 20ஆம் தேதிக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்ற முடிவுடன் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர். மேலும், சில தினங்களுக்கு முன் அட்டாக் பாண்டி வீட்டில் நடத்திய சோதனையில் முக்கியத் தடயங்களும் சிக்கியதாகக் கூறப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 60 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் 117 சாட்சிகள், 100 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.