பொட்டு சுரேஷ் கொலை வழக்கு... சிக்காத அட்டாக் பாண்டி: விலகாத மர்மம்
மதுரை: மதுரையில் திமுக ஆட்சிகாலத்தில் மதுரையில் முக்கிய சக்தியாக வலம் வந்த பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த கொலைவழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து விட்டனர். ஆனால் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை இன்னமும் நெருங்க முடியாமல் தவிக்கின்றனர் போலீசார்.
திருச்சி ராமஜெயம் கொலையைப் போலவே மதுரை பொட்டு சுரேஷ் கொலையும் பல்வேறு மர்மங்களைக் கொண்டதாக இருக்கிறது. ராமஜெயம் கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூறி அவ்வப்போது பேட்டி தரும் திமுக முக்கிய தலைவர்கள் பொட்டு சுரேஷ் கொலையானது பற்றியும், கொலையாளி பற்றியும் எந்த ஒரு பேட்டியோ, அறிக்கையோ விடவில்லை. காரணம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியும் திமுக பிரமுகர் என்பதுதான்.
மத்திய அமைச்சராக இருந்த அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்து, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர் பொட்டு சுரேஷ். கடந்த தி.மு.க ஆட்சியின்போது அரசு வட்டாரங்களில் சர்வவல்லமை பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மதுரையில் பெரிய பொறுப்பில் இருந்த அதிகாரிகள்கூட பொட்டுவை தேடிச்சென்று சல்யூட் அடிக்க வேண்டிய நிலை இருந்தது.அதனால்தான் தென் தமிழகத்தின் துணை முதல்வர் என்று வர்ணித்தார் ஜெயலலிதா.
பொட்டு சுரேஷ் அரெஸ்ட்
ஆட்சி மாறியதும் அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள் காரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்தார். மதுரையில் தனக்கு எதிராக கோஷ்டி உருவாகி வருவதை மோப்பம் பிடித்து அதிமுகவில் சேர முயன்றார். அதற்கு அதிமுக தலைமை ஒத்துழைக்கவில்லை.
வெட்டிக்கொலை
இந்த நிலையில்தான் 2013ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாளான ஜனவரி 31ம் தேதியே இரவு 8 மணியளவில் அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார் பொட்டு சுரேஷ். அவரது உடலில் 37 வெட்டுக்காயங்கள் இருந்தன.
பொட்ட போட்டுட்டாங்க
பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட உடனேயே அவரை பிடிக்காத நபர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் சொன்ன வார்த்தை 'பொட்டை' போட்டுட்டாங்க என்பதுதான். திமுக ஆட்சி காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அதிகாரிகள் கூட இந்த தகவலை மகிழ்ச்சியோடு பரிமாறிக்கொண்டனராம்.
வலது கை போச்சே
மதுரையில் நடந்த இந்தக் கொலை திமுகவினர் இடையே மட்டுமல்லாது தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கொலையாக மாறியது. பொட்டு சுரேஷை சடமாக பார்த்த அழகிரியோ, ‘என் வலதுகரத்தை இழந்துவிட்டேன்' என்று கதறி அழுதார். அதற்குப்பின் கொலை வழக்கு என்ன ஆனது என்று திமுகவினர் யாரும் அக்கறை காட்டவில்லை. பொட்டு சுரேஷ் கொலைக்கு அட்டாக் பாண்டிதான் காரணம் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.
போட்டுத்தள்ளிய பழைய பகை
தி.மு.க-வின் மதுரை மாநகரச் செயலாளராக இருக்கும் வேலுச்சாமியின் நெருங்கிய உறவினர்தான் அட்டாக் பாண்டி. வேலுச்சாமிதான் அழகிரியிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டாராம். துரை.தயாநிதி எங்கு சென்றாலும் அவர் பாதுகாப்புக்கு அட்டாக்தான் துணைக்குச் செல்வார். ஆரம்பத்தில் சாதராணமாக இருந்த அட்டாக் பாண்டி, தினகரன் அலுவலக எரிப்பு விவகாரத்தில் முன்னின்று செயல்பட்டவாராம்.
கொலைக்கு பதவி
மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் பதவியை அட்டாக்குக்கு வாங்கிக் கொடுத்தார் அழகிரி. அதன்பின் மாவட்டத் தொண்டர் அணி செயலாளர் பதவியைக் கொடுத்தார். ஆனால் பொட்டு சுரேஷ் வந்த பின்னர் அட்டாப் பாண்டிக்கு சறுக்கல் ஆரம்பித்து விட்டதாம். இதுவே இருவருக்கும் இடையே பகை வளர காரணம் என்கின்றனர்.
அட்டாக் பாண்டி ஆதரவாளர்கள்
கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த சில தினங்களில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நீதிமன்றத்தில் சரண்
அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் இந்தக் கொலையில் முக்கியத் தொடர்பு இருப்பதாக போலீசுக்குத் தெரியவர, அவர்கள் இருவர் மட்டும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நெருங்க முடியலையே
அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார், நாங்கள் முந்திக்கொண்டோம்' என்று வாக்குமூலத்தில் கூறியிருந்தனர். கடைசியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்குக் காரணம் என்று வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த வந்த போலீஸ், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவான அட்டாக் பாண்டி
கொலை நடந்து இரண்டரை வருடங்களாகியும் இன்றுவரை அட்டாக் பாண்டியை மட்டும் போலீஸால் நெருங்க முடியவில்லை. அட்டாக் பாண்டியின் மனைவி உட்பட உறவினர்கள் மேல் எல்லாம் பல வழக்குகள் போடப்பட்டது. அதற்கெல்லாம் அசரவில்லை அட்டாக் பாண்டி.
தேடப்படும் குற்றவாளி
கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்து ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டினர் போலீசார். சொத்துகளையும் வங்கிக் கணக்கையும் முடக்கியதோடு சொத்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவு பெற்றது. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அட்டாக்கை காட்டிக் கொடுக்கவில்லை உறவினர்கள்.
வெளிநாடு தப்பி ஓட்டம்
சில மாதங்களுக்கு முன்புவரை கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் அங்கு தேடிச்சென்றது. இப்போது மும்பையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். வெளிநாட்டுக்குச் சென்று விட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என்று மட்டும் போலீசார் சொல்லி வருகின்றனர். ஆனால் அட்டாக் பாண்டியுடன் சில போலீஸ் அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகிறார்கள் என்ற பேச்சும் உள்ளது.
மதுரை போலீஸ் வட்டாரமோ? அட்டாக் பாண்டி ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். விரைவில் கைதுசெய்வோம்'' என்று அரசராமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கூறி வருகின்றனர். பொட்டு சுரேஷ் கொலைக்கு எப்போது விடை கிடைக்கும்? எல்லாம் அந்த மதுரை மீனாட்சிக்குத்தான் வெளிச்சம்.