இந்த சாதனை மாணவிகளை வறுமையால் தடுத்து நிறுத்த முடியவில்லை
கோவை: பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகள் தீபிகா, காயத்ரி ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூரை சேர்ந்தவர் தீபிகா. ஏழை குடும்பத்தை சேர்ந்த அவரால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் தினந்தோறும் திட்டு, அவமானம். இதனால் 7ம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்தினார்.
இது குறித்து அறிந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் தீபிகாவை படிக்க வைக்க முன்வந்தனர். திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்த தீபிகா பத்தாம் வகுப்பு தேர்வில் 81 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதே போன்று தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்ட அதிகாரிகள் படிக்க வைத்த காயத்ரி என்ற மாணவியும் பத்தாம் வகுப்பு தேர்வில் 79 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
காயத்ரியின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். காயத்ரியின் தாய் மாதம் ரூ.2 ஆயிரத்திற்கு வேலை செய்து வந்தார். வறுமையால் 9 வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் காயத்ரிக்கு.
பிற குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஏக்கத்துடன் பார்த்த காயத்ரிக்கு ஆபத்பாண்டவனாய் வந்து அவரின் கையிலும் புத்தகப்பையை கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள். காயத்ரி கருவம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.
வறுமையால் கல்வி என்பது எட்டாக்கனியாகிப்போன நேரத்தில் தீபிகாவுக்கும், காயத்ரிக்கும் உதவி கிடைத்ததை நினைத்து நினைத்து அவர்கள் மகிழ்கிறார்கள்.