புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின்போது மின்தடை.. 3 நோயாளிகள் பரிதாப சாவு
டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்றபோது திடீரென மின்சாரம் தடைபட்டதால் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
புதுச்சேரி: மின்தடை காரணமாக, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி்யை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவியது.
புதுச்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த கணேஷ், சுசீலா மற்றும் அம்சா ஆகிய 3 நோயாளிகளுக்கு இன்று ரத்த சுத்திகரிப்புக்கான, டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்றபோது திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. உரிய மாற்று ஏற்பாடுகள் செய்திருக்காததால் சிகிச்சை தடைபட்டு அந்த இரு பெண்களும் முதலில் பரிதாபமாக பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட கணேஷ் சுமார் அரை மணி நேரதம் கழித்து உயிரிழந்தார்.
விவரம் அறிந்ததும், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்த நோயாளிகள் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்க புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது புதுச்சேரி அரசு.