கன்னியாகுமரி முழுவதும் மின்வெட்டு... 2 நாட்களுக்கு இதே நிலை தான் நீடிக்குமாம்!
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளத.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஓகி புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீராக 2 நாட்கள் ஆகும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே உருவான ஓகி புயல் குமரியை விட்டு நகர்ந்தாலும் அதன் தாக்கம் இன்னும் 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை மற்றும் சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்த மரங்களால் மின்கம்பங்களும் முறிந்து கிடக்கின்றன.
நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிற்குமே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதா வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறியுள்ளார். 1, 500 உயர் மின் அழுத்த கம்பங்களும், 2,500 குறைந்த மின் அழுத்த கம்பங்களும் என மொத்தம் 4000க்கும் அதிகமான மின்கம்பங்கள் புயலால் சேதமடைந்துள்ளன.
மின்கம்பங்கள் சேதம் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீராக 2 நாட்கள் ஆகும் என்றும் ஆணையர் சத்தியகோபால் கூறியுள்ளார்.
மின்இணைப்பு இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும் அவர்களுக்கு தேவையான பால்பவுடர், பிரெட் உள்ளிட்டவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.