ஜல்லிக்கட்டு போராட்ட பந்தல் அகற்றம்.. மின்சாரம் துண்டிப்பு.. போலீஸ் அடாவடி.. புதுக்கோட்டையில்!
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று வரும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டம் நடைபெறும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும், இதனை நம்ப மக்கள் மறுத்து வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டுத் தொடர்பாக நிரந்தர சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று நிரந்தர சட்டம் கேட்டு போராட்டம் நடத்தி வரும் மக்கள் அமர்ந்திருக்கும் போராட்டப் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதே போன்று, ராஜபாளையத்திலும், மக்கள் போராட்டம் நடத்தும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். ஆனாலும், போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.