கரண்ட் இல்லாததால் ரோடே கதி- இயற்கை பிரச்சனை என தங்கமணி கூல் பதில்.. கடுகடு சென்னைவாசிகள்!
சென்னையில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகளோடு பெற்றோர்கள் சாலையில் சுற்றித் திரிந்த சோகம் நேற்றிரவு அரங்கேறியது.
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென்று கரண்ட் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வட சென்னை பகுதிகளில் நேற்று சுமார் 6 மணி நேரமாக மின்சாரம் இல்லை. வியாசர்பாடி, ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஐ.ஓ.சி. உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணிக்கு போன கரண்ட் அதிகாலை 3 மணிக்கு பின்னர்தான் படிப்படியாக வந்தது.
இதே போன்று எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பெரம்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
ரோடே கதி
வெயில் காலம் அதுவுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகளால் உறங்க முடியாமல் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தனர். அவர்களின் அழுகையை கட்டுப்படுத்த பெரியவர்கள் சாலைகளில் சுற்றித் திரிந்த சோகம் இரவெல்லாம் நடந்தது. வீட்டிற்குள் சென்றால் மின்விசிறியை பயன்படுத்த முடியாமல் வேர்த்து கொட்ட மீண்டும் குழந்தைகள் அழ என்று பரிதாபமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
கூல் பதில்
நிலைமை இப்படி சீர்கெட்டு கிடக்க, இந்தப் பிரச்சனை இயற்கையாக ஏற்பட்ட பிரச்சனை என்றும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூலாக பதில் கூறியுள்ளார். இது சென்னைவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
கடமை
கோடை காலம் வருகிறதென்றால் மின் உற்பத்தி செய்யும் அனைத்து அலகுகளும் சரியாக உள்ளனவா என்பதை சரி பார்த்து, பழுதுகளை நீக்கி முறையாக செயல்பட வைக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதை எல்லாம் செய்யாமல் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் தங்கமணி.
முன்னெச்சரிக்கை
மழைக்காலம் வரப் போகிறது என்றால், மழை நீர் கால்வாய்கள் சீராக்கப்பட்டு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தூர் வாருவது என்ற அடிப்படை வேலைகளை செய்து வைத்திருக்க வேண்டும். அதுபோலவே கோடை காலங்களில் மின்சாரம் மற்றும் கோடைகாலம் தொடர்பான பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும்.
தலை தூக்கும் அச்சம்
தமிழக அரசு மழை காலத்திலும் அதனை செய்ததில்லை. கோடை காலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்று மக்கள் புலம்பித் தள்ளுவதில் உண்மை இல்லாமல் இல்லை. கோடை காலத்தில் தொடக்கமே இப்படி அமோகமாக இருந்தால் இன்னும் இருக்கும் எஞ்சிய காலத்தை எப்படி கடப்பது என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது என்கின்றனர் சென்னைவாசிகள்.