காலை வாரிய காற்றாலை மின் உற்பத்தி... தலைதூக்கும் மின்வெட்டு
நெல்லை: கடந்த இரண்டு நாட்களாக நன்றாக கை கொடுத்து வந்த காற்றாலை மின் உற்பத்தி திடீரென வெறும் 50 மெகா வாட்டுக்கு கீழ் சென்றதால் நெல்லை மாவட்டங்களில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மின்வெட்டு நிலவி வருகிறது. மின் நுகர்வு தேவை சுமார் 13 ஆயிரம் மெகா வாட்டை நெருங்கி விட்டது. ஆனால் உற்பத்தியோ மிக குறைவாக 11 ஆயிரம் மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது. இதனால் வெளியிடங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் 1000 மெகா வாட்டுக்கு மேல் வெளியிடங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது கோடை வெயில் நிலவி வருவதால் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மே மாதம் இரண்டாம் வாரம் முதல் காற்று பலமாக வீச தொடங்கியதால் காற்றாலைகள் சுழல தொடங்கின. இதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரம் கிடைத்தது. கடந்த 1 வாரத்திற்கும் மேலாக காற்றாலை மின்சாரம் கை கொடுத்து வந்தது.
கடந்த வாரம் காற்றாலை மூலம் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நள்ளிரவு முதல் காற்றின் வேகம் குறைந்ததால் இதன் மூலம காற்றாலை மின் உற்பத்தி திடீரென சரிந்தது. அதிகாலை 633 மெகா வாட்டாக குறைந்தது. காலை 6 மணி நிலவரப்படி 50 மெகா வாட்டுக்கு கீழ் மின் உற்பத்தி சென்றுள்ளது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் காலை 7 மணி முதல் விட்டு விட்டு மின் தடை செய்யப்பட்டது.
ஜூன் 1ம் தேதி முதல் தமிழக அரசு அறவே மின் வெட்டை விலக்கி கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் காற்றாலைகள் காலை வாரியதால் மின் வாரியத்தினர் தடுமாறி வருகின்றனர்.