"மின்மிகை" மாநிலத்தின் தலைநகரி்ல் அடிக்கடி "கரண்ட் கட்" ஆவது ஏன்?... பொதுமக்கள் குழப்பம்!
சென்னை: மின்மிகை மாநிலம் என்று தமிழகத்தை அதிமுக அரசு அறிவித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தலைநகர் சென்னையிலோ அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதுவும் சில பகுதிகளில் பல மணி நேரத்திற்கு. இந்த தொடர் மின்தடையால் கொதிப்படைந்த மக்கள் நேற்று பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், செம்பாக்கம், எழும்பூர், கொடுங்கையூர் என பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மின்தடை ஏற்பட்டு வருகிறது. இரவு, பகல் என பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் தடைப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்தில் பொதுமக்கள் கேட்டால் சரியான பதில் வருவதில்லை என்று மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.
பல மின்வாரிய அலுலகங்களில் உதவிப் பொறியாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் செல்போனை ஆப் செய்து வைத்து விடுவதாகவும், அலுவலகத்திற்குப் போன் போட்டால் பெரும்பாலும் எடுப்பதே இல்லை என்றும் மக்கள் புகார் கூறுகிறார்கள்.
வியாசர்பாடி
சென்னை வியாசர்பாடி மகாகாவி பாரதியார் நகர் பகுதியில் நேற்று காலை 9 மணி முதல் பல மணி நேரம் மின்சாரம் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கிழக்கு தாம்பரம்
கிழக்குத் தாம்பரம் பகுதியில் இரவு போன கரண்ட் மீண்டும் வராததால் மக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செம்பாக்கம், சேலையூர் பகுதிகளிலும் நேற்று இரவு மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
குரோம்பேட்டை
இதேபோல குரோம்பேட்டை பகுதியிலும் அடிக்கடி மின்தடை கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வருகிறது. தொடர் மின்தடை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் போகும்போது படும் கஷ்டம் மக்களுக்குத்தான் தெரியும்.
பலருக்கும் பாதிப்பு
மின் தடை காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள், வங்கிச் சேவைகள் என பல தரப்பிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொழில் நிறுவனங்களில் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக அவர்கள் புலம்புகின்றனர்.
விளக்கம் இல்லை
சென்னையில் ஏன் இப்படி மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. மின்மிகை மாநிலமாக தமிழகத்தை அதிமுக அரசு கூறி வரும் நிலையில் தலைநகரில் ஏன் இந்தப் பிரச்சினை, இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டாம், மின்வாரிய அதிகாரிகளே மக்களிடம் தெளிவாக விளக்கி விட்டால் கூட போதும். மக்களும் குழப்பம் தீர்ந்து தெளிவாக இருக்க முடியும் அல்லவா?