சிவகாசியில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் தடை.. பொதுமக்கள் கடும் அவதி.. தொழில்கள் முடங்கும் அபாயம்
சிவகாசியில் அறிவிக்கப்படாத மின் தடை நீடித்தால் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்படும் என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிவகாசி: சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் ஆயிரக்கணக்கான கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு தலை தூக்கியுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் உள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் தினமும் அறிவிக்கப்படாத 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மின்வெட்டு சரி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இ.பி.காலனி. ரிசர்வ்லயன், இந்திராநகர், என்.ஜி.ஓ காலனி உட்பட பல பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.
இ.பி.காலனி, இந்திராநகர், முத்துராமலிங்கபுரம் காலனி, சிலோன் காலனி, கோபுரம் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும் அச்சகங்கள், பாலி பிரின்டிங், கட்டிங், ஸ்கோரிங் தொழில்கள் மின்தடையால் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை நீடித்தால் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்படும் என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.