24 மணிநேரத்தில் மின் இணைப்பு.. மின்தடை பற்றி முன்கூட்டியே எஸ்எம்எஸ்.. தங்கமணி அதிரடி
புதிய மின் இணைப்புகள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: புதிய மின் இணைப்புகள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் மின் தடை குறித்து ஒரு நாள் முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்றும் கூறினார்.
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மின்சார நண்பன்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மின்நுகர்வோருக்கு அவர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள, ஏற்பட உள்ள மின் பராமரிப்பு பணிகள் குறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் மின் தடைகள் கிடையாது. 2 ஆண்டுகளாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மின் நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருசில டிரான்ஸ்பார்களில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் தடையை ஒன்றும் செய்ய முடியாது. 3000 மெகாவாட் மின்சாரம் உபரியாக உள்ளது.
கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தொடர்ந்து வைத்து வருகிறோம். மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் இணைப்புகள் வழங்கப்படும். "மின்சார நண்பன்" திட்டத்தின் படி மின் தடை குறித்து ஒரு நாள் முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்றார்.