சென்னையின் பல்வேறு இடங்களில் திடீர் மின்வெட்டு.. பொது மக்கள் கடும் அவதி !
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வட சென்னை பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் சர்மாநகரில் உள்ள மின்சார வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையின் முக்கிய இடங்களில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது. வியாசர்பாடி, ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஐ.ஓ.சி. உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மடிப்பாக்கம் பகுதியில் இரவு 10 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வட சென்னை பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் சர்மா நகரில் உள்ள மின்சார வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மின் வெட்டுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை