மழைத் தூறல் ஆரம்பித்ததுமே ப்யூஸை பிடுங்கும் மின்வாரியம்!
சென்னை: முன்பெல்லாம் சென்னையில் மழைப் பெய்தால் அதை ரசித்து அனுபவித்து படமெடுத்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்வார்கள். அடடா மழைடா அடை மழைடா.. என சிச்சுவேஷன் பாட்டுப் பாடுவார்கள்.
டிசம்பர் பெருமழை வெள்ளத்துக்குப் பிறகு மழை என்றாலே அலற ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். அனுபவம் அப்படி. இன்னொரு பக்கம் மின்சார வாரியத்தின் 'அட்ராசிட்டி'!
மழைத் தூறல் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் மின்சாரத்தை நிறுத்திவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக கோடையில் வெயில் உக்கிரமாக அடிக்கும் போது, மின்சாரத்தைத் துண்டித்துவிடுவார்கள். கேட்டால், ட்ரிப் ஆகுது... வெயில் அதிகமாவதால் அடிக்கடி இப்படி நடக்குது என்பார்கள் மின்வாரிய ஊழியர்கள்.
அதுவே மழை பெய்யும் நாட்களில் என்றால் வீக்கா இருந்த கேபிள்கள் வெடிச்சிடுச்சி... ட்ரான்ஸ்பார்மர்ல ட்ரிப் ஆகிடுச்சு என்று காரணம் கூறி நிறுத்திவிடுகிறார்கள்.
கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மின் துண்டிப்பு நிகழ்ந்தது. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மேலே படித்ததைத்தான் காரணங்களாக ஒப்பித்தார்கள்.
டிசம்பர் பெருமழை வெள்ளத்தின்போது புறநகர்களில் தொடர்ச்சியாக 5 முதல் 6 தினங்கள் வரை மின் இணைப்பு தரப்படவில்லை. அதன் பிறகு முழு வீச்சில் மின்தட பழுது பார்ப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் முழுமையாக நடக்கவில்லை. பழுதடைந்த பகுதிகளை மட்டும் சரி செய்த மின்வாரியம் வழக்கம் போல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டது.
தொலை நோக்கோடு மின்கோபுரங்களை சீரமைத்தல், மின்மாற்றிகளைப் புதுப்பித்தல், கம்பிவடங்களைப் புதுப்பித்தல் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால்தான் 5 மாதங்களுக்குள் மீண்டும் மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன, மின் மாற்றிகள் பழுதடைந்துள்ளன என்கிறார் ஒரு பொறியாளர்.
வேளச்சேரியில் கடந்த டிசம்பர் மழையின் போதுதான் மின்கம்பி அறுந்து விழுந்து தம்பதிகள் மரணமடைந்தனர். இந்த மழையின்போதும் அதே வேளச்சேரியில் மின்கம்பி அறுந்துவிழுந்து மேலும் ஒரு தம்பதி பலியான சோகம் நடந்துள்ளது.
மின்வாரியத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்கிறார்கள் வேளச்சேரி மக்கள்.