நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி
நெல்லை: நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு வந்த ரயிலில் இரவு நேரமாகியும் பெட்டிகளில் விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருநெல்வேலி-செங்கோட்டை இடையே காலை 6.20, 9.30, மாலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மாலை நெல்லையில் இருந்து கிளம்பும் ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி முடிந்து ஏராளமானோர் இந்த ரயிலில் தங்களது ஊருக்கு திரும்பி செல்வது வழக்கம்.
இரவு நேரத்தில் பேட்டை, அம்பாசமுத்திரம், ஆகிய இடங்களை கடந்து செல்லு்ம் போது ரயிலில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இந்நிலையில் மாலை 6.30 மணி்க்கு வழக்கம் போல் நெல்லை ரயில் செங்கோட்டைக்கு புறப்பட்டது.
இரவு நேரமாகியும் ரயில் பெட்டிகளில் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் ரயில் பெட்டியில் இருட்டில் பெண்கள், குழந்தைகளோடு பயணம் செய்த பயணிகள் கழிவறைக்குகூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து பயணிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுதது ரயில நிலைய ஒலிபெருக்கியில் ரயில் நிலைய மின் ஊழியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளிடம் தெரிவித்தும், விளக்குகள் சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் செல்போன் வெளிச்சத்திலே பயணம் செய்தனர்.
பின்னர். ரயில் காறுகுறிச்சி வந்ததும் மின் கோளாறு சரி செய்யப்பட்டு விளக்குகள் எரிந்தன. இந்த சம்பவத்தால் ரயிலில் இரவு நேரத்தில் நெல்லை-செங்கோட்டை மார்க்கத்தில் ஏறவே பயணிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.