கூடங்குளம் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்! 1000 மெகாவாட்டுக்கு இலக்கு
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த 2007ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் அது தள்ளிப் போனது.
மத்திய, மாநில நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பின்னர் அணு மின் நிலைய பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. 2013ம் ஆண்டு முதல் அணு உலையில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து 1000 மெகா வாட் மின் உற்பத்தி துவங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி முதல் அணு உலையில் 160 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் மின் உற்பத்தி திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதற்காக முதல் அணு உலை அவ்வப்போது நிறுத்தப்பட்டு சோதனை நடந்து வந்தது. 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கபு்பட்ட நிலையில் ஓராண்டுக்கு பின் பராமரிப்பு பணிகள் தொடரப்பட வேண்டும் என்பது விதி. இதனால் கடந்த ஜூலை 15ம் தேதி கூடங்குளம் அணு உலை இயக்கம் நிறுத்தப்பட்டது.
பின்னர், மின் உற்பத்தி துவங்கிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் டர்பைனில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. டர்பைன் பழுதை நீக்க ரஷ்யா விஞ்ஞானிகளும், இந்திய விஞ்ஞானிகளும் தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதே மின் உற்பத்தி மீண்டும் துவங்க சுமார் 6 வார காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் 1000 மெகாவாட்டை எட்டுவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.