கோடை வரும் முன்னே... ஒரு மணிநேர மின்வெட்டு அறிவிப்பு வருது பின்னே...!
சென்னை: கோடைகாலம் எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில் குடியிருப்புகளுக்கு ஒருமணிநேரம் மின்வெட்டு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய நஷ்டத்தை சமாளிக்க, விரைவில், வீடுகளுக்கு, ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மின்சார பற்றாக்குறை காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு வீடுகள், தொழிற்சாலைகளுக்கு 2 முதல் 3 மணிநேரம் வரை மின்தடை அமல்படுத்தப்பட்டது. இது அறிவிக்கப்பட்ட மின்தடைதான் என்றாலும் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இதுவே வழிவகுத்தது.
2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் சுமார் 8 மணிநேரம் வரை மின்சாரம் தடைபட்டது. பின்னர் சீசன் காலங்களில் காற்றாலை மின்சாரம் கைகொடுத்து காப்பாற்றி வந்தது. தற்போது புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, கூடுதலாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தும், தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறையவில்லை.
மின்தடை ரத்து
லோக்சபா தேர்தல் வெற்றி காரணமாக, கடந்த, ஆறு ஆண்டுகளாக அமலில் இருந்த மின் தடையை, கடந்த ஆண்டு ஜூன் முதல், தமிழக அரசு திடீரென ரத்து செய்தது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாததால், வேறு வழியில்லாமல், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தொழிற்சாலைகளுக்கு, மீண்டும் 20 சதவீதம் மின் தடையை அரசு அமல்படுத்தியது.
மின் தேவை அதிகரிப்பு
கடந்த ஆண்டு மின் தேவை, ஜூன், 24ம் தேதி - 13,775 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச மின் தேவையாகும். நடப்பு ஆண்டில் மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, விரைவில் 15 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளதை அடுத்து தற்போது, 738 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் வாரிய மின் நிலையங்களில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆவதில்லை. இதனால், நாள்தோறும், மின் பற்றாக்குறை 800 - 1,000 மெகாவாட் என்றளவில் உள்ளது.
ஒருமணிநேரம் மின்வெட்டு
எனவே, கோடையில், குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகிக்க, தொழிற்சாலைகளுக்கு, கூடுதலாக, 20 சதவீதம் மின்தடை அமல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், சென்னையில், மே மாதம், 23, 24ம் தேதிகளில் நடக்க உள்ள, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி, அரசு, அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதால் தற்போது குடியிருப்புகளுக்கு, ஒரு மணி நேரம், மின்தடை செய்ய, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் அறிவிப்பு
இதற்கான அரசாணை தயாரிக்கும் பணி, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள எரிசக்தி துறை செயலர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அரசாணை, மின்வாரிய அதிகாரிகளிடம் வழங்கியதும், மின்தடை அமல்படுத்தப்படும் என்றும் மின்வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தியில் மக்கள்
இப்போதுதான் மின்வெட்டு பிரச்சினை எதுவுமின்றி சற்றே நிம்மதியடைந்துள்ளனர் தமிழக மக்கள் இந்த சூழ்நிலையில் மின்வெட்டு அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலால் பொதுமக்களிடையே அதிருப்தி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.