என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு.. இருளில் மூழ்கிய வட மாவட்டங்கள்
என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வட மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது.
கடலூர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் புதுச்சேரி, கடலூர், திருச்சி, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவடங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகம் உள்பட பிறமாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய மின்தொகுப்பு மையத்தில் அலைவரிசையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரம் செல்லும் வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையம், இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மாலை 5.30 மணி இருந்து நாகை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, விழுப்புரம், நாகை, காரைக்கால், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 4 மணிநேரத்திற்கு பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு படிப்படியாக அந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.