தமிழகத்தில் மின்சாரப் பிரச்சினை இன்னும் தீரவில்லையே! - கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் மின் பிரச்னை இன்னும் தீரவில்லை. கோடை நெருங்கும் சூழலில் மின் தடை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிறுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முடிக்கப்பட்ட மின் திட்டங்கள், கொள்முதல்கள் வாயிலாக 4,640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது என்று கூறியுள்ளார். இது, புள்ளி விபரங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டவையாகும்.
இந்த ஆண்டு படிக்கப்பட்ட ஆளுநர் உரையில், அதிமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மின் உற்பத்தித் திறன் 3,358 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மின் தேவை 13,170 மெகாவாட் ஆகும். ஆனால், மின் உற்பத்தி 12,170 மெகாவாட்தான். அதனால் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் குடியிருப்புகளுக்கு அறிவிக்கப்படாமல், 2 முதல் 3 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அபாயத்தை மறைக்க அதிமுக ஆட்சியினர் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த நிலையில் மின் தேவையில் தன்னிறைவை எய்தும் நிலையை தமிழகம் எட்டியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி, மக்களை ஏமாற்றுகிறார்".
-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.