சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள்.... திமுகவில் அப்படி ஒன்றும் உற்சாகம் இல்லையாமே
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பெறுவதில் திமுகவில் பெரிய அளவில் உற்சாகம் இல்லாததுபோல் அதன் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகம் காணப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அலைமோதும் கூட்டம்
அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்டவை தேர்தலில் போட்டியிட உள்ள கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. இதில் அதிமுக தலைமை நிலையம்தான் "ஜே ஜே"வென திருவிழா கூட்டம்போல காட்சி தருகிறது.
அம்மாவுக்கும் சேர்த்து...
விருப்ப மனுக்களை கொடுப்பவர்கள் 'மறக்காமல்' அம்மா எங்க தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற "அம்மா அவர்களுக்கான" முத்திரையுடன் கூடுதல் விருப்ப மனுவையும் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் திமுக தலைமை நிலையமான அறிவாலயம் அப்படி ஒன்றும் உற்சாகத்துடன் இல்லை.
சீட் கிடைக்குமா?
திமுகவில் விருப்ப கட்டணம் ரூ25,000 நிர்ணயிக்கப்பட்டது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது... அதே நேரத்தில் அதிமுகவைப் பொறுத்தவரையில் அடிமட்ட தொண்டருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்ற ஒரு நிலை இருக்கிறது.
ஆனால் திமுகவிலோ "மாவட்டம்" சொல்லுகிற நபர்கள், கருணாநிதி குடும்பத்தினர் பரிந்துரைப்பவர்கள் என குறுகிய வட்டத்தினருக்குத்தான் சீட் கிடைக்கும் என்கிற நிலை.. இதனால் எதற்கு 'வெட்டியாக' காசை வீணாக்கி விருப்ப மனு வாங்க வேண்டும் என்ற சுணக்கம்தான் திமுகவினரிடம் மேலோங்கி இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதிக இடங்களில் போட்டி
மேலும் அதிமுகவைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகள் என்பவை சிறு சிறு கட்சிகளாகவே இருக்கின்றன. இதனால் அதிமுக அதிக இடங்களில் போட்டியிடும் நிலை உள்ளது.
திமுகவினர் தயக்கம்
ஆனால் திமுகவோ கூட்டணி கட்சிகளுக்காக காத்துக் கொண்டுள்ளது. வெற்றி பெறுவதற்காக சரி பாதி தொகுதிகளைக் கூட கூட்டணி கட்சிகளுக்கு திமுக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை கூட வரலாம் என்கிறார்கள். இதனால் நம்ம தொகுதி அந்த கட்சிக்கு போய்விடுமோ? என்கிற ஒரு தயக்கமும் திமுகவினரிடம் இருப்பதாகத் தெரிகிறது.
இதனால்தான் அண்ணா அறிவாலயத்தில் அப்படி ஒன்றும் உற்சாகம் வெளிப்படாத சூழல் நிலவுகிறது...