நரபலி புகார்... பி.ஆர்.பி. தரப்பைச் சேர்ந்த 2 பேரிடம் போலீஸ் விசாரணை
மதுரை: நரபலி கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேரும் இன்று காலை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்ட நிலையில் இரண்டு பேர் மட்டுமே விசாரணைக்கு வந்திருந்தனர்.
மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் உள்ள பி.ஆர்.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில் குழந்தை உள்பட 4 பேரின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முன்னிலையில் இவை தோண்டி எடுக்கப்பட்டன. இவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படவுள்ளன.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அழகு கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கூறி பி.ஆர்.பழனிச்சாமி, ஜோதிபாசு, ஐயப்பன், பரமசிவன் ஆகிய 4 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.
இன்று காலை அவர்கள் கீழவளவு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்மனில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் முற்பகல் 11.0 மணி வரை யாருமே வரவில்லை. பி.ஆர். பழனிச்சாமி நேரில் வருவார் என்று அவரது தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதையடுத்து மற்ற 3 பேரும் ஒரு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் உத்தரவு போனது. இதையடுத்து ஜோதிபாசு, ஐயப்பன் ஆகியோர் விசாரணைக்கு வந்தனர்.
அவர்களிடம் கூடுதல் டிஎஸ்பி மாரியப்பன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. மற்ற இருவரும் இன்று மாலைக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.