சென்னைக்குள் பிஆர் பாண்டியன் வாகன பேரணி நுழைய தடை-பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுப்பு
பி.ஆர்.பாண்டியன் வாகன பிரச்சார பயணம் சென்னையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பி.ஆர்.பாண்டியனின் இரு சக்கர வாகன பயணம் சென்னையில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளதுடன், அவரது பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுத்துள்ளனர்.
பி.ஆர்.பாண்டியன் கடந்த 25-ம் தேதி முதல் வேதாரண்யத்திலிருநது இரு சக்கர வாகனம் பரப்புரை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பின்பற்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க வலியுறுத்தியும் நடைபெற்றுவரும் இந்த பிரச்சார பயணத்தை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்த இரு சக்கர பிரச்சார பயணம் நாகை, திருவாரூர், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்று இன்று சென்னையை அடைகிறது.
சமீபத்தில், சென்னையில் பொதுக்கூட்டங்களை நடத்திகொள்ள போலீசார் பட்டியலை வெளியிட்டதுடன், சென்னை நகரின் மிக முக்கிய இடங்களுக்கு தடை விதித்தும் இருந்தனர். அப்போது பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பி.ஆர்.பாண்டியனின் பிரச்சார பயணத்திற்கு சென்னைக்குள் நுழைய சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. அத்துடன் பி.ஆர்.பாண்டியனின் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
பி.ஆர்.பாண்டியன் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான், உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.