காலாவுக்காக காவிரியை அடகு வைத்தால் தமிழகத்தை விட்டு ரஜினி வெளியேற வேண்டும்: பி.ஆர். பாண்டியன்
காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்துக்கு பிஆர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்: காலா திரைப்படத்துக்காக காவிரியை கர்நாடகாவிடம் அடகு வைத்தால் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு இதுவரை அமைக்கவில்லை. வரும் 15-ந் தேதி பிரதமரை சந்திக்கும் வரை காத்திருக்காமல் தமிழக அமைச்சர்கள் குழுவை டெல்லிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்க வேண்டும்.
வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கு உரிய நடவடிக்கை அவசியம். மக்கள் கருத்துக்கு எதிராக காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கமல் கூறுகிறார். இதை ரஜினியும் ஆதரிக்கிறார்.
இருவரது நடவடிக்கைகளும் கண்டனத்துக்குரியது. இருவரும் தமிழக மக்களையும் விவசாயிகளையும் குழப்புகின்றனர். காவிரி விவகாரத்தில் ரஜினியும் கமலும் தமிழருக்கு எதிராக செயல்பட்டால் போராட்டம் நடத்த நேரிடும்.
காலா திரைப்பட பிரச்சனையில் காவிரியை கர்நாடகாவிடம் ரஜினிகாந்த் அடகு வைத்தால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.