நடிகர் சங்கத்தை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்... பி.ஆர். பாண்டியன் கொந்தளிப்பு
மன்னார்குடி: காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்த தயங்கும் நடிகர் சங்கம், கன்னட நடிகர்களுக்கு ஊக்கம் தருவது போல நடந்து கொள்வது வேதனை தருகிறது. தமிழக மக்களை நம்பி பிழைப்பு நடத்தும் நடிகர்கள் சங்கம், தமிழர்களுக்குப் பாதிப்பு வரும்போது தட்டிக் கழிப்பது கொதிப்பை தருவதாக உள்ளது.
தமிழக மக்கள் நடிகர் சங்கத்தையும், நடிகர்களையும் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
மன்னார்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
கர்நாடகத்தில் நடிகர்கள் தண்ணீர் தரக்கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவையும் அவமதித்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கூடி போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில் கன்னடர்களின் போராட்டத்தை ஊக்கப்படுத்தும் விதத்திலும், தமிழர்களின் உணர்வுகளை நசுக்கும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என முடிவு எடுத்திருப்பது வேதனையளிக்கிறது.
தமிழக முதல்வரை அவமதித்தற்காக கண்டனம் தெரிவிக்கும் தமிழக நடிகர்கள் கன்னடர்களை எதிர்த்து போராட்டம் நடத்த தயங்குவது ஏன்.
தமிழகத்திலிருந்து நடிக்க சென்ற நடிகர்கள் கூட கன்னடர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். தமிழக மக்களை நம்பி பிழைப்பு நடத்தும் நடிகர்கள் சங்கம் தமிழர்களுக்கு பாதிப்பு வரும்போது தட்டிக்கழிப்பது ஏன். உங்களுடைய தமிழ் உணர்வு எங்கே சென்றது.
காவிரி தண்ணீரை குடித்து உயிர்வாழக்கூடிய நடிகர்கள் நன்றி மறப்பது ஏன். தமிழர்களை நமது பிழைப்பிற்கு பயன்படுத்தும் நடிகர்கள் தமிழர்கள் தாக்கப்படும்போது எதிரிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் ஓழிந்துகொள்ளலாமா. இதற்கெல்லாம் நடிகர் சங்கம் பதில்சொல்லியாக வேண்டும்.
இதனை தமிழக மக்களும், தமிழகமும் ஒருபோது மன்னிக்க மாட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலைத்துவிட்டு தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அந்த அமைப்பிற்கு தமிழர்கள்தான் பொறுப்பிற்கு வரவேண்டும். அண்டை மாநில நடிகர்கள் யாரும் தமிழகத்தில் நடிப்பதையோ தொழில் செய்வதையோ இனி அனுமதிக்கக்கூடாது.
நடிகர் சங்கத்தால் தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழத்தில் இனி எந்த ஒரு நடிகனுக்கும் நடிகர் சங்கம் வைக்கக்கூடாது என்ற முடிவை இளைஞர்கள் எடுக்க வேண்டும். இனி தமிழக விவசாயிகளுக்கு எதிரானவர்கள் நடிகர்கள். தமிழகத்தில் உள்ள ரசிகர் மன்றங்களை சங்கங்களை உடனடியாக கலைத்திட வேண்டும் என்றார்.