ஓ.பி.எஸ்ஸுடன் கை கோர்த்த "கொங்கு கிங்" பி.ஆர்.சுந்தரம்.. ஜெ.வின் தீவிர விசுவாசி!
கொங்கு மண்டலத்தின் வலிமையான அதிமுக தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுடன் கை கோர்த்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கை கோர்த்துள்ள நாமக்கல் தொகுதி லோக்சபா எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மறைந்த ஜெயலலிதாவின் மிகத் தீவிர விசுவாசிகளில் ஒருவர். அந்த விசுவாசமே, இன்னொரு தீவிர விசுவாசியான ஓ.பி.எஸ். பக்கம் அவரை வர வைத்துள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கியமான அதிமுக பிரபலங்களில் சுந்தரத்திற்கு தனி இடமுண்டு. 65 வயதான சுந்தரம் நாமக்கல் மாவட்டத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ள அதிமுக தலைவர். சொந்த செல்வாக்கும் வைத்துள்ள அரிதான தலைவர்களில் சுந்தரமும் ஒருவர்.
ராசிபுரம் எம்.எல்.ஏ.வாக முன்பு இருந்தவர் சுந்தரம். ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற கொங்கு மண்டலத் தலைவர்களில் இவரும் ஒருவர். 1996 மற்றும் 2001 சட்டசபைத் தேர்தல்களில் ராசிபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 2015 லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான சுந்தரம், ஓ.பி.எஸ் பக்கம் வந்துள்ளதால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல அதிமுக எம்.எல்.ஏக்களையும் இவர் ஓ.பி.எஸ் பக்கம் கூட்டிக் கொண்டு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் சசிகலா தரப்பு மேலும் மேலும் பலவீனமடைந்துள்ளது.