பள்ளி ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம்... சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி
பள்ளி ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம் என்று செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா பேட்டி அளித்தார்.
சென்னை: இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா தனது சாதனைக்கு பள்ளி ஒத்துழைப்பே காரணம் என்று தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களது மூத்த மகள் வைஷாலி. இளைய மகன் பிரக்ஞானந்தா. இவர் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் இருந்ததால் அவரது தந்தையும் அவரை செஸ் பயிற்சியில் ஈடுபட வைத்தார். இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்று வரும் க்ரெடின் ஓபன் என்ற சர்வதேச செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார்.
அவர் 8-ஆவது சுற்றில் வெற்றியை ஈட்டியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். மிக இளைய வயதில் இப்பட்டத்தை பெற்ற இரண்டாவது நபர் பிரக்ஞானந்தா. இவர் 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து தமிழகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில் தான் இத்தகைய சாதனை படைத்ததற்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆகியோரே காரணம் என்றார்.
இதுகுறித்து பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமி கூறுகையில் மகன் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய மகள் செஸ் விளையாடுவாள். அதை பார்த்துவிட்டு பிரக்ஞானந்தாவுக்கும் ஆர்வம் வந்தது. 8-ஆம் வகுப்புக்குள் இந்த சாதனை படைத்ததற்கு பள்ளியின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் முடிந்தது. மகனுக்கு விளையாட்டை போலவே படிப்பிலும் ஆர்வம் உள்ளது. எத்தனை போட்டிகளுக்கு சென்றாலும் தேர்வுக்காக அவ்வப்போது படித்துவிடுவான் என்றார்.