கருணாநிதி நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்.. பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி
சென்னை: கருணாநிதி என்றால் சமூக நீதி. அவர் மறைந்த பிறகுதான் மதவாதத்திற்கு எதிராக நாம் எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறோம். அவர் மெளனித்த பிறகுதான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். இது, அவரது காலத்தில் அத்தனை பேரும் பாதுகாப்பாக இருந்திருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
கோவையில், கலைத்துறையினர் நடத்திய திமுக தலைவர் கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரகாஷ் ராஜ் பேசியதாவது:
தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சென்னை இருந்தது. சினிமா மட்டுமல்லாமல் அரசியலுக்கும் தலைநகரம் சென்னைதான். இப்போது தலைநகரம் இருக்கிறது. ஆனால் தலைவர் இல்லை.
ஒரு நடிகனாக திராவிட திருநாடின் கலைஞனாக இருவர் படம் எனக்கு அங்கீகரம் கொடுத்தது. அது மட்டுமல்ல இன்று வரை அடையாளமாகவும் இருக்கிறது.
திரைதுதறைக்கு வந்து சில படங்களில் நடித்த நேரம். தமிழ்நாடும், தமிழ்மொழியும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை. மணிரத்தினம் தனது இருவர் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைத்தார். அது கலைஞரை பிரதிபலிதிக்கும் கதாபாத்திரம் என்று அப்போது எனக்குத் தெரியாது. அதுவரை கலைஞரை அரசியல் தலைவர் என்பதைக் கடந்து வேறொன்றும் தெரியாது.
கன்னட மொழியில் தமிழ் எழுதிப் பேசும் எனக்கு கருணாநிதியின் தமிழ் பேசி நடிக்க வேண்டிய சூழல். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இதை தவற விடக் கூடாது என்று மனதில் தோன்றியது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த நடிகனுக்கே சவாலான பாத்திரம்.
கலைஞரின் வசனத்த யாரெல்லாம் பேசி நடித்திருக்கிறார்கள் என்றால் நடிகர் திலகம் பெயரைச் சொல்கிறார்கள். கலைஞரின் பராசக்தி படம் பார்த்தபோது கலைஞர் தமிழ் பயமுறுத்தவில்லை, மாறாக நம்பிக்கை வந்தது. அவர் எழுதிய சங்கத் தமிழில் நூலில் உள்ள புறநானுற்றுக் கவிதை ஒன்றை எடுத்து பயிற்சி செய்தேன். நான் தமிழ் கற்க தொடங்கியது அங்கிருந்துதான்.
கலைஞரின் தமிழை புரிந்து கொள்வதை உணர்ந்து கொண்டேன். இங்கிருந்துதான் எங்களுக்குள் அறிமுகம் தொடங்கியது. அவர் எழுதிய தமிழ் தென்றலாகவும், புயலாகவும் இருந்தது. அப்போது கல்கி திரைப்படத்துக்காக தமிழக அரசின் விருது கிடைத்தது. விருது வழங்கும் மேடைதான் எனக்கும் அவருக்கும் முதல் அறிமுகம்.
எனக்கு விருது கொடுத்தபோது அவர் பேசுகையில், பிரகாஷ் ராஜுக்கு விருது வழங்கும்போது இங்கு ஆனந்தம், அதற்குக் காரணம் எனக்கும் தெரியும். அவருக்கும் தெரியும், இருவருக்கும் தெரியும் என்றார். இருவர் படம் வெளியானபோது அவரது தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால் அழைக்கவில்லை. ஒரு நடிகனாக இந்தியா முழுவதும் இருவர் மூலம் அறிமுகமானேன்.
ஆனால் இருவருக்காக தமிழக அரசு விருது கிடைக்கில்லை. அவரது கையால் விருது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். கிடைக்காத ஆதங்கத்தில் கோபமாக பேட்டியும் கொடுத்தேன். முதல்வருக்கு எனது கருத்து வருத்தம் கொடுத்தது.
நான் எப்போது சந்தித்தாலும் சந்திக்கும் நெருக்கத்தை அளித்திரு்நதார். அவருடன் அதிகாலை நடைபயணம் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது ஒருமுறை எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னேன்.. சத்தம்தான் என்னுடையது, உணர்வு உங்களுடையது என்றேன்.
ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவரது மறைவுச் செய்தியை டிவியில் பார்த்தேன். தனியாக அழுது தீர்த்தேன். கட்சித் தொண்டர்கள் எழுப்பிய கோஷத்தைப் பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.
கலைஞர் மெளனித்த பிறகுதான் என்னைப் போன்றவர்கள் மதவாதத்தை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளோம். ஒரு நாடு ஒரு மொழி போன்றவற்றை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறோம். இது அவர் இருந்தவரை நம்மை பாதுதகாத்திருக்கிறார் என்ற உண்மையை நம் கன்னத்தில் அறைகிறது.
காந்தி என்றால் அகிம்சை என்பது போல கலைஞர் என்றால் சமூக நீதிதான் நினைவுக்கு வரும். அவர் கொண்டு வந்த அத்தனை சமூக நீதித் திட்டங்களையும் அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வு என்ற நவீன தீண்டாமையை எதிர்த்துப் போராடியவர். அதை ரத்து செய்தவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம் எத்தனை பெண்களை தலை நிமிர வைத்தது என்பதை பெண்கள் உணர்வார்கள் என்று பேசினார் பிரகாஷ் ராஜ்.