இளம் ராணுவ அதிகாரிகள் பெரும் பணிகளை எதிர்க்கொள்ள வேண்டும்: பிரணாப் முகர்ஜி
சென்னை: ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் பெரும் பணிகளை எதிர்க்கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
சென்னை பரங்கிமலை ராணுவ மையத்தில் பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை இன்று நிறைவு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இன்று காலையில் பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையத்திற்கு சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். பின்னர் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரணாப் முகர்ஜி சிறப்பாக செயல்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
ராணுவ பயிற்சி மையம்
ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமிக்கு (ஓ.டி.ஏ) அனுப்பப்படுகின்றனர். இந்தியாவில் சென்னை, கயா, டேராடூன் ஆகிய இடங்களில் 3 ராணுவ அதிகாரி பயிற்சி அகடமி (ஓடிஏ) உள்ளது. சென்னையில் மட்டும் தான் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் சென்னை ஓடிஏ பறந்து விரிந்து காணப்படுகிறது.
ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி
இங்கு இரண்டு கட்டங்களாக ஆண்டுக்கு 400க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குதிரையேற்றம், போர் ஒத்திகை, மலை ஏறுதல், ஆயுதம் கையாளுதல், கரடு, முரடான பாதைகளை கடந்து செல்லுதல் உள்ளிட்ட கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிக்கு தேவையான அனைத்து வசதிகள், அதிகாரிகள் தங்கும் வசதி, உணவு என அனைத்து அம்சமும் சென்னை ஓடிஏவில் உள்ளது.
பயிற்சி நிறைவு
இந்த ஆண்டு முதல்கட்டமாக பெண்கள் 36 பேர் உள்பட மொத்தம் 186 பேர் கடந்த மார்ச் மாதம் பயிற்சி நிறைவு பெற்றனர். தற்போது பெண்கள் 32 பேர், ஆப்கானிஸ்தான், பூடான் உள்ளிட்ட வெளிநாட்டினர் 20 பேர் உள்பட 169 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சியும் இன்றுடன் முடிவடைந்தது. இவர்களில், சென்னையை சேர்ந்த சரண்யா, ஆர்த்தி, கோவையை சேர்ந்த ஈஸ்வரன் உட்பட 20 பயற்சி அலுவலகர்களும் அடங்குவர்.
அணிவகுப்பு மரியாதை
இந்தநிலையில், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் இன்று காலை 169 ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா நடைபெற்றது. விழாவில், இந்திய குடியரசு தலைவரும், முப்படைகளின் தலைவருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். பயிற்சி அலுவலர்கள் வழங்கிய அணி வகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்று கொண்டார்.
பதக்கம் வழங்கி கவுரவம்
தொடர்ந்து, பயிற்சியில் சிறப்பு இடம் பிடித்த வருண் சிங் சவுகான், அல்லா ஸ்ரீதர், திவ்யா தியாகி, ஆகியோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வழங்கினார். ஒட்டுமொத்த சிறப்பு இடம் பெற்ற ராகேஷிற்கு கத்தி வழங்கி கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து, பயிற்சி அலுவலர்கள் அவர்வர் மத அடிப்படையில் உறுதி மொழிகளை எடுத்து கொண்டனர்.
சவால்களை சந்திக்கவேண்டும்
விழாவில் பயிற்சி அலுவலர்கள் முன்னிலையில் பிரணாப் முகர்ஜி பேசும்போது, இந்த விழாவில் பங்கேற்பது முப்படைகளின் தலைவர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டை பாதுகாப்பது மட்டுமின்றி, நாட்டில் ஏற்படும் பேரிடர்களின் போதும் உங்களின் பங்களிப்பு மகத்தானது என்றார்.
ராணுவ அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ளவர்களுக்கு பெரிய பணிகள் காத்துக்கொண்டிருப்பதாக கூறினார். நாட்டை பாதுகாப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
3வது குடியரசுத்தலைவர்
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் இது போன்ற பயிற்சி நிறைவு அணிவகுப்புகளில் பங்கேற்பவர்களில் 3வது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
7 அடுக்குப் பாதுகாப்பு
இதையடுத்து, பிற்பகலில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு பிரணாப் முகர்ஜி டெல்லி புறப்பட்டு சென்றார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.