காஞ்சிபுரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி... சங்கராச்சாரிகளுடன் சந்திப்பு!
காஞ்சிபுரம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காஞ்சிபுரம் வந்தார். காமாட்சியம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்குச் சென்ற அவர் ஒரு மணி நேரம் தங்கி இருந்து பூஜைகள் செய்து வழிபட்டார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
பதவிக்காலம் முடிவதற்கு முன் அவர் காஞ்சிபுரத்துக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் அரக்கோணம் ராஜாளி ராணுவ தளத்துக்கு நேற்று பிற்பகல் வந்தார். அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்துக்கு சென்றார்.
பின்னர் அவர் பட்டு வேட்டி, பட்டு துண்டு அணிந்து காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் நுழைவு வாயிலில் இருந்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. .
ஜனாதிபதியை காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பிறகு ஜனாதிபதி பேட்டரி கார் மூலம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி சென்று சாமி தரிசனம் செய்தார்.
சங்கர மடத்தில்...
அதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி பின்னர் அங்கிருந்து காஞ்சி சங்கரமடத்துக்kg;d சென்றார்.
மடத்தின் நுழைவு வாயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து முக்தியடைந்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்துக்கு சென்று அவருடைய தங்க பாதத்துக்கு மலர்களால் பூஜை செய்தார்.
காஞ்சிபுரத்துக்கு ஜனாதிபதி வருகையையொட்டி சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.