ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: திமுக கேட்டது என்ன.. பிரவீன் குமார் அளித்த பதில் என்ன....?
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் என்று இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம், திமுக, தேமுதிக கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டனர். அதற்கு பிரவீன் குமார் பதிலளித்தபோது, இதுகுறித்து தமிழக சட்டசபைச் செயலாளரிடமிருந்து தொகுதி காலியாக உள்ளதாக தகவல் வந்ததும்தான் முடிவு செய்யப்படும் என்று விளக்கினார்.
சென்னையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று பிரவீன் குமார் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகிய பணிகள் வருகிற 15ந் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 15-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணி நடைபெறுகிறது. ஜனவரி 5ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதையொட்டி நாளை மறுநாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இதுதொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்றது.
அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக சார்பில் கிரிராஜன், பாஜக சார்பில் ராகவன், காங்கிரஸ் சார்பில் சக்தி வடிவேல் உள்ளிட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் திமுக பிரதிநிதி கிரிராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் பெயர் விவரங்களை பூத் அளவில் ஏஜெண்டுகளிடம் தெரிவிக்க கேட்டுக் கொண்டு இருக்கிறோம். வெகு தூரத்திற்கு சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது அதை பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் வாக்கு சாவடி அமைக்க வேண்டும் என்றும் கூறினோம்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று கேட்டோம். அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பதில் அளிக்கும்போது, சட்டசபை செயலாளரிடம் இருந்து இன்னும் எங்களுக்கு அறிவிப்பு வரவில்லை. காலியான தொகுதி என்று அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதேபோல தேமுதிக தரப்பிலும், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் என்று கேட்டார்களாம். அவர்களுக்கும் பிரவீன் குமார் இதே பதிலையே கூறினாராம்.