லோக்சபா தேர்தல் 2014: ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ வாங்கினாலோ ஓராண்டு சிறை ...
சென்னை: லோக்சபா தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி முடிவு, வேட்பாளார்களை அறிவித்தல், தேர்தல் அறிக்கையை தயாரித்தல் மற்றும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் என இந்திய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் ஆணையமும் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மிக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், முன்னேற்பாடாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளை சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அன்னை தெரசா வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 32 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 7 வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரவீன்குமார் கூறியதாவது :-
ஆய்வு:
ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சட்டம் ஒழுங்கின் நிலை மற்றும் மின்னணு ஓட்டு எந்திரம், வாக்குச்சாவடிகள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை உயர்வு:
தமிழகத்தில் தற்போது 60ஆயிரத்து418 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையையும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
விழிப்புணர்வு:
தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கு பறக்கும் படை அமைத்துள்ளோம். ஓட்டுக்கு பணம் பெறுவதற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். சினிமா, பேனர் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
உரிமைகள் பறிபோகும்:
ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டால் தொகுதிக்கு சாலை வேண்டும், வேறு வசதிகள் வேண்டும் என்று எம்.பி.யிடம் உரிமையோடு கேட்க முடியாது. ஓட்டுக்குத்தான் பணம் கொடுத்துவிட்டேனே என்று அவர் மறுத்துவிடுவார். எனவே 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி வளர்ச்சி அடையாமல் போய்விடும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
ஓட்டை விற்கலாமா..?
ஆயிரம் ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் ஓட்டை விற்கவேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
ஒரு ஆண்டு சிறை:
அதோடு, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவதை வீடியோ படம் அல்லது புகைப்படம் படம் பிடித்து அனுப்பும் வசதிகளை இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளோம். எனவே அவற்றை இந்த குற்றத்திற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.
சிறைத் தண்டனை:
ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். முன்பு ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு ஆதாரங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது படங்கள் மூலமாக ஆதாரங்கள் பெறப்படும்.
தேர்தல் விளம்பரத்துக்கான சட்டம்:
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எவை என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசீலித்து வருகின்றனர். தேர்தல் விளம்பரங்கள் குறித்து ஏற்கனவே மாநிலத்தில் சட்டங்கள் உள்ளன.
கடுமையாக அமல்:
பொது இடங்கள், தனியார் இடங்கள், கிராமப் பகுதிகளில் எப்படி தேர்தல் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்பதுபற்றிய சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவோம்.
கட்சிகளின் கோரிக்கை:
தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தல் நடத்தப்படுமா? என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். ஆனால் இங்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.
கட்சி சின்னங்கள்:
பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இருந்தால் அவற்றை மறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.