ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது போலீஸில் புகார்
ஜெயலலிதா சிகிச்சை எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீஸில் ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் புகார் அளித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் புதுவண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் இன்று வெளியிட்டார். நாளை ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நேரத்தில் மக்களை பாதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதைத் தொடர்ந்து வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கும் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.