நீலகிரி.. கர்நாடக மாநில பேருந்துகள் நிறுத்தம் - சுங்கச்சாவடிகள் வெறிச்சோடின
பாதுகாப்பு கருதி, கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி: காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி விவகாரத்தில் "திட்டம்" ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை. கெடு முடிந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகம் கொந்தளிப்பில் உள்ளது.
அதன்படி இன்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பொது அமைதியை நிலை நாட்டும் விதமாக நீலிகிரி மாவட்டத்தில் முன்னெசரிக்கையாக கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறி வாகனங்களும் தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லூர் என்ற இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக - கர்நாடக மாநில எல்லைகளில், பேருந்து உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எல்லை சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன.