காலதாமதத்தால்தான் கர்ப்பிணிகள் இறப்பு அதிகரிப்பு – மதுரை மருத்துவர்கள் தகவல்
மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையைத் தவிர்த்து ஊரகப்பகுதிகளில் 51ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மதுரை நகரில் 19 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 5 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டவை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கர்ப்பிணிகளில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, கர்ப்பப்பை பாதிப்பு, ரத்தசோகை ஆகியவற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெண் ஒருவர் கர்ப்பிணியானதும் பத்து மாதத்தில் அவரது எடை 10 முதல் 12 வரை கூடுதலாக வேண்டும். அப்போதுதான் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். ஆனால், பெரும்பாலான பெண்கள் தற்போது எடை கூடாமலே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக்கியமான குழந்தையை பெறமுடியும் என்பதால் தாயின் ஆரோக்கியமே குழந்தை இறப்பைத் தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகள் மீது உரிய கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தால் நிச்சயம் உயிரைக் காப்பாற்றலாம். மதுரை ஊரகப் பகுதியில் கடந்த 4 மாதங்களில் 210 கர்ப்பிணிகள் தீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டு அதில் 180 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனை உதவியுடன் 167 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் பலர் சுகப்பிரசவத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் 24 மணி நேரக் கண்காணிப்பில் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. ஆகவே உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தால் நிச்சயம் தாய், சேயைக் காப்பாற்றிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.