மூளைச் சாவடைந்த கோவை கர்ப்பிணிப் பெண் - உடல் உறுப்புகள் தானம்
கோவை: கோவையில் விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த கர்ப்பிணியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஜோதி என்பவர் புதன்கிழமை தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார்.
வயிற்றில் இருக்கும் குழந்தை உயிரோடு இருப்பது சோனோகிராம் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் இரண்டு நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ஜோதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே வயிற்றில் உள்ள குழந்தையை உயிரோடு மீட்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை எடுத்தனர். ஆனால் குறைப் பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தையின் உயிரை மருத்துவர்களால் காப்பற்ற முடியவில்லை.
அதேசமயம் பல்வேறு பரிசோதனையின் மூலமாக அந்தப் பெண் மூளைச் சாவடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோதியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து மூளைச் சாவடைந்த அந்தப் பெண்ணின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், இரண்டு கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தோல் பாகங்கள், கங்கா மருத்துவமனையில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் தானமாக வழங்கப்பட்டது.