கர்ப்பிணி பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாமனார், மாமியார் கைது...மன்னார்குடியில் கொடூரம் !
கர்ப்பிணி பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் மன்னார்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: மன்னார்குடியில் கர்ப்பிணியான மருமகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி அருகே லெக்கனாம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(69), இவரது மனைவி புஷ்பவள்ளி(50). இவர்களது மகன் திருஞானம்(30) கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் வேலை பார்த்தார். அப்போது அதே ஆலையில் பணிபுரிந்து வந்த காளையார்கோவிலைச் சேர்ந்த ஜான் மகள் தீபா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தீபாவிற்கு ஆண் குழுந்தை பிறந்தது. இதனிடையே தீபாவை அவரது தந்தை வீட்டில் தங்க வைத்து விட்டு திருஞானம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் திருஞானத்தின் அண்ணன் முருகேசன் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சிங்கப்பூரிலிருந்து வந்த திருஞானம் கர்ப்பிணியான தனது மனைவி தீபாவையும் மன்னார்குடிக்கு அழைத்து சென்றார். அப்போது திருஞானத்தின் தந்தை செல்வராஜ் மற்றும்அவரது மனைவி புஷ்பவள்ளி ஆகியோர் தீபாவை வீட்டிற்குள் விட மறுத்தனர். கர்ப்பிணி என்றும் பாராமல் தீபாவை இரக்கமின்றி அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சென்று தீபாவை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செல்வராஜ், புஷ்பவள்ளி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.