தென்காசி அருகே கர்ப்பிணி பெண் மரணத்தில் சந்தேகம்... கொலையா என கணவரிடம் விசாரணை
தென்காசி: தென்காசி அருகே கர்ப்பிணிப் பெண் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லைமாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது.இந்த விடுதியில் குற்றாலத்தை சார்ந்த ஆறுமுகம் என்பவர் குடும்பத்தோடு தங்கி காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சொர்ணம் இவரை தென்காசி அருகேயுள்ள மத்தாளம் பாறை பகுதியை சார்ந்த நாகராஜ் என்ற தொழிலாளிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது சொர்ணம் 3மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் இன்றுகாலை சொர்ணம் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கணவர் அங்கு வந்ததாகவும், அவர்களுக்குள் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சிறிது நேரத்தில் சொர்ணம் வீட்டில் தீ பிடித்து எரிந்துள்ளது. சொர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தார் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு தானாக திறந்துள்ளது. அங்கு எரிந்த நிலையில் பிணமாக சொர்ணம் கிடந்துள்ளார்.
இது குறித்து குற்றாலம் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே தென்காசி காவல்துறை துணைக்கு கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சொர்ணம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவர் நாகராஜைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.