கர்ப்பிணி பலி... கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு!
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை: திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அருகே நேற்று மாலை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை விரட்டிச் சென்று ஆய்வாளர் காமராஜ் வாகனத்தை எட்டி உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து இரவு பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமூக ஆர்வலர் பாத்திமா முறையீடு செய்துள்ளார். காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதியவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று முறையிட்டனர். தாமாக முன்வந்து விசாரிப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு ஏற்கத் தயார் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.