மணிமங்கலத்தில் களமிறங்கிய அமுதா ஐஏஎஸ்... கர்பிணிகள், பெண்கள் பரிசல் மூலம் மீட்பு
மணிமங்கலம் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. வீட்டுக்குள் சிக்கித்தவிக்கும் கர்ப்பிணிகளை அமுதா ஐஏஎஸ் மீட்டு முகாமிற்கு அனுப்பி வைத்தார்.
Recommended Video
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித்தவித்த கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை ஐஏஎஸ் அதிகாரி அமுதா மீட்டு முகாமிற்கு அனுப்பி வைத்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் மணிமங்கலம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மணிமங்கலத்தில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் ஆறுபோல ஓடுகிறது. இடுப்பளவு தண்ணீர் ஓடுவதால் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் மருத்துவ வசதி பெறமுடியாமல் சிக்கித்தவித்தனர். இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மணிமங்கலத்தில் வெள்ளநீர்
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவிக்கும் கர்ப்பிணிகளை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார். அங்குள்ள 2 கர்ப்பிணிகளை மீட்க ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
களமிறங்கிய அமுதா ஐஏஎஸ்
இதனையடுத்து அமுதா ஐஏஎஸ் தலைமையில் மீட்புக்குழுவினர் விரைந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பரிசல்கள் மூலம் மீட்டனர். படகுகளில் அனைவரையும் அழைத்துக்கொண்டு வந்தார் அமுதா. முழங்கால் அளவு நீரில் நடக்க முடியாமல் தவித்தவர்களை மீட்டு தண்ணீரில் நடந்து வந்தார் அமுதா ஐஏஎஸ். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்றும் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார்.
மழை வெள்ளம் மீட்பு
கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக இடம்பெற்றிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்க ராணுவத்துடன் களமிறங்கினார். அப்போது அவர் ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் அகற்றினார்.
அடித்து நொறுக்கிய அமுதா ஐஏஎஸ்
தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் புதுநகரில் 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் அடையாறுக்கு செல்லும் நீர் வழி ஆக்கிரமிப்புகள், மணிமங்கலம் பகுதியிலும் உபரி நீர் வழிந்தோடும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை அரசியல்வாதிகளின் எதிப்புகளையும் மீறி துணிச்சலுடன் அகற்றி வெள்ளநீரை வடியச் செய்தார் அமுதா ஐஏஎஸ். அதே போல இந்த ஆண்டும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க களமிறங்கியுள்ளார்.
பெண்கள் நன்றி
இதனிடையே மீட்புப்படையினர் மீட்டதற்கு நன்றி கூறிய அவர்கள், சொந்த ஊருக்கு பிரசவத்திற்கு செல்வதாக கூறியுள்ளனர். அந்த இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.