ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க தகுந்ததல்ல- பிரேமலதா
ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க உகந்ததல்ல என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்கும் நிலையில் இல்லை என்றும் இவ்வளவு ஏன் அது பாசனத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பிரேமலதா தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்துவிட்டது.
விமான நிலையத்தில் ...
ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராமங்களில் இருந்து பெறப்படும் நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட எந்த பயன்பாட்டுக்கும் ஏற்றதல்ல என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திருமண விழாவில் பங்கேற்க தூத்துக்குடி வந்த பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
சோதனை அறிக்கை
அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது, அப்பகுதியில் இருந்து நிலத்தடி நீரை சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டீயூட்டில் சோதனை மேற்கொள்வதற்காக பெற்று சென்றதாகவும் அதன் அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிக்கவோ, விவசாயம் மேற்கொள்ளவோ, கட்டுமானத்திற்கோ ஏதுவானதாக இல்லை என சோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி உறவினர்
மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது. ஆலை மூடப்பட்டதற்கு மக்களின் போராட்டம் தான் காரணம். சேலம்- சென்னை எட்டுவழி விரைவு சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். பொதுமக்களின் முடிவுப்படி தான் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 8 வழிச் சாலைக்கான ஒப்பந்த உரிமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பெறவுள்ளதாக வரும் தகவல் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
8 வழிச்சாலை
இவர்களின் வருமானத்திற்காக பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மக்களின் கருத்தாக உள்ளது. அதே நேரம், அரசுத் திட்டங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அப்போதுதான் திட்டங்கள் வெற்றி பெறும். தமிழக வளர்ச்சிக்கு போடப்படும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தமிழகத்தின் முன்னேற்றத்தை கேள்விக்கு உரியதாக்கும் என்றாலும், எட்டு வழிச்சாலை முக்கியமா என்பதனை அப்பகுதி மக்கள் மட்டுமே முடிவு செய்ய இயலும்.
இழப்பீடு தேவை
இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களை கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சேலம் விமான நிலையம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, சேலம் மாவட்டம் மேலும் வளர்ச்சி அடைய விமான நிலையம் அவசியம் தேவை என்றும், அப்பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என்று பிரேமலதா தெரிவித்தார்.