தன்னம்பிக்கையின் மறு பெயர் எது தெரியுமா?... "பிரேமலதா விஜயகாந்த்"!
தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் நியாயமாக தேர்தல் நடந்தால் தேமுதிகதான் வெற்றி பெரும் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
கரூர்: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் நியாயமாக தேர்தல் நடைபெற்றால் தேமுதிக வெல்வது உறுதி என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற இருந்த அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இத்துடன் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏ சீனிவேலு மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட காலி இடத்திற்கும் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. இறுதியாக, இந்த 3 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த 3 தொகுதிகளிலும், அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக படுதோல்வி அடைந்ததையடுத்து, அந்தக் கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது நடைபெறும் இந்த 3 தொகுதி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது என்று முடிவு செய்து வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முத்துவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். தளவாய்பாளையம், வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளதாக பிரேமலதா குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தல் நியாயமாக நடந்தால் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெறும் என்றும் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.