"ஆட்டோ ஓட்றாரு.. பஸ்ஸுல தொங்குறாரு.. அல்வா சாப்பிடுறாரு".... சாடிய பிரேமலதா.. சிரித்த விஜயகாந்த்!
நெல்லை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக சாடிப் பேசியதை அருகே இருந்து பார்த்து சிரித்து சிரித்து ரசித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நெல்லை மாட்டம் ஆலங்குளத்திற்கு வருகை தந்த விஜயகாந்ததும், பிரேமலதா விஜயகாந்த்தும் அங்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் இருவரும் தொண்டர்களிடையே பேசினர்.
மகளிர் அணிச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் பேச்சுத்தான் தொண்டர்களைக் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக மு.க.ஸ்டாலினை அவர் கிண்டலடித்து விமர்சித்துப் பேசுவது தேமுதிக தொண்டர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏன் விஜயகாந்த்தே கூட மனைவி பேசுவதை ரசித்துக் கேட்டு சிரிக்கிறார்.
நெல்லை கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது...
நமக்கு நாமே என்று
மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்று கிளம்பியிருக்கிறார். ஆட்டோ ஓட்றார். பஸ்ஸில் தொங்கறார். ரோட்ல போற வர்றவங்களையெல்லாம் கூப்பிட்டு செல்பி எடுத்துக்கிறார். பஸ்ல இருக்கிறவங்களை எல்லாம் கூப்பிட்டு கைகொடுக்கிறார். திருநெல்வேலிக்கு போய் அல்வா சாப்பிடுறார்.
நல்லாத்தான் இருக்கு
பார்க்க நல்லாத்தான் இருக்கிறது. ஆனா, ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி. இதை நான் கேட்கலை. நீங்க போகிற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்கிறாங்க.
நீங்க என்ன செஞ்சீங்க
ரோடு சரியில்லை. பஸ் சரியில்லைனு போகிற இடமெல்லாம் பேட்டி கொடுக்கறீங்களே... உங்க கட்சிதானே தமிழகத்தை 5 முறை ஆண்டது. கிட்டத்தட்ட 25 வருடங்கள் இந்த தமிழ்நாடு உங்க கையில இருந்தபோது நீங்க நேர்மையா ஒழுங்கா லஞ்ச லாவண்யம் இல்லாம ஆட்சி செய்திருந்தீங்கன்னா இன்னிக்கு ஓட்டை பஸ்ல ஏறி பேட்டி கொடுக்கற நிலைமை உங்களுக்கு வந்திருக்குமா...
அப்பெல்லாம் எதுவும் செய்யாம
அத்தனை வருடங்கள் எதுவும் செய்யாம தேர்தல் வருகிறது என்றதும் 6வது முறையா வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டு தெருத்தெருவா வர்றீங்க.... ஆனா, மக்கள் இதை நம்பத் தயாரில்லை. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் மக்களுக்காக அல்ல. அவருடைய சின்ன சின்ன ஆசைகளைத்தான் நமக்கு நாமே திட்டம் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறார்.
எப்பயாச்சும் தெருவுக்கு வந்திருக்கீங்களா...!
இன்று மக்களை தெருத்தெருவாய் போய் சந்திக்கிற நீங்கள் துணை முதல்வராகவோ, மேயராகவோ இருந்தபோது ஒருமுறையாவது இப்படி தெருவுக்கு இறங்கி வந்ததுண்டா?''
அங்க நிதி.. இங்க மணி!
மக்களுக்கு திமுக, அதிமுக பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது. கருணாநிதி குடும்பத்தில் எல்லார் பெயரும் உதயநிதி, அருள்நிதி, தயாநிதி, கலாநிதி என்றுதான் வைப்பார்கள். அதிமுக அமைச்சர்கள் பெயரெல்லாம் பாருங்கள் சுப்பிரமணி, வேலுமணி, வீரமணி, தங்கமணி என்றுதான். திமுக என்றால் நிதி, அதிமுக என்றால் மணி. இனி இவர்கள் இருவரையும் தமிழக மக்கள் நம்பத் தயாரில்லை என்று போட்டாரே பார்க்கனும்.
இந்தப் புன்னகை என்ன விலை
பிரேமலதாவின் பேச்சைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிக்க, அருகே அமர்ந்திருந்த "கேப்டன்" விஜயகாந்த்தோ சிரித்தபடி பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.