அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருப்பூர் போலீசார் பதிவு செய்துள்ள அவதூறு கிரிமினல் வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் விஜயகாந்த், தே.மு.தி.க. தலைவராக உள்ளார். சட்டசபைத் தேர்தலை யொட்டி, கடந்த சில நாள்களாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன்.
இதேபோல் திருப்பூரில் ஏப்ரல் 1-இல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினேன். அப்போது, தமிழக முதல்வர், அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக, என் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், என் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்தக் கூட்டத்தில், நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தக் கருத்தைத் தான் வலியுறுத்தி பேசினேன். இதன் காரணமாக, மதிமுக பொதுச் செயலாளரையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் எனக்கும், தேமுதிக.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறியது போல், எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எனவே, இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
அண்மையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவதூறான கருத்துகளை மனுதாரர் பேசியிருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார். மேலும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மனு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபந்தனை அடிப்படையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், இரண்டு வாரத்துக்கு பிரேமலதா தினமும் 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.