அதிமுக, திமுக பாணியில் தேமுதிக தலைமையிலும் மாற்றம்! பொதுக்குழுவில் முடிவு?
தேமுதிகவில் பிரேமலதாவுக்கு முக்கிய பதவி வழங்க அக்கட்சியின் தலைவர் விஜயாகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பொங்கலுக்குப் பிறகு கூடவுள்ளது. இதில் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப்டடார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு முக்கிய பதவி வழங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேமலதாவுக்கு வழங்கப்படும் பதவி குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜயகாந்த் கண் உபாதை உட்பட பல்வேறு உடல் நல பிரச்சினைகளில் சிக்கியுள்ள நிலையில் உயர் பதவி ஒன்று பிரேமலதாவுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. இவர் அக்கட்சியின் முக்கிய பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.