டெங்குவை அரசு கட்டுப்படுத்தாமல் இருக்க காரணம் இதுதான்.. பிரேமலதா பொளேர்
கோவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Recommended Video
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவால் பாதித்த மக்களை தேமுதிகவின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இன்று விஜயகாந்த் திருவள்ளூரில் டெங்குவால் பாதித்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் ஆய்வு செய்ததில் 5 விதமான காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
சுகாதாரம் இல்லை
காய்ச்சல் வருவதற்கு முக்கிய காரணம் சுத்தம் சுகாதாரம் இல்லாதது தான். ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாதததால் குப்பை அகற்ற, சாக்கடைகளை சுத்தம் செய்ய மற்றும் மக்கள் தேவைகளை நிறைவேற்ற யாரும் இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுயலாபம் பார்க்கின்றனர்
இவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டிய அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதிலும், பதவியை தக்கவைத்துக் கொள்வதிலும், சுயலாபம் பார்ப்பதிலேயே கவனமாக உள்ளனர். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த இன்று எந்த அமைச்சரோ, ஆளும் கட்சியினரோ இல்லை என்பதற்கான சான்று தான் இது.
மத்திய அரசின் உதவி
கோவை சுத்தத்திற்கு பெயர் போன மாவட்டம், ஆனால் இங்கே டெங்கு நோய் இருக்கிறதென்றால், மற்ற மாவட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தமிழகம் முழுவதும் டெங்கு பரவி இருக்கிறது. இயற்கை பேரிடரின் போது முதலில் களப்பணியாற்றுவது தேமுதிக தான், அப்படித் தான் இன்று டெங்குப் பணியை தொடங்கியுள்ளோம். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும்.
டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாவட்டமான புதுக்கோட்டையிலும், முதல்வர் பழனிசாமியின் சேலம் மாவட்டத்திலும் தான் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் இருக்கிறது. இவற்றில் எல்லாம் ஆளும் கட்சியினர் கவனம் செலுத்தி டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.