வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் ரெடி.... விரலில் 'மை' வைக்க நீங்க ரெடியா?
சென்னை: தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளை மே16 ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட இறுதிக் கட்ட பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தற்போது தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்படுவதும், பணப்பட்டுவாடா செய்வதும் கண்டறியப்பட்டும் வருகின்றன.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்
தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் குதித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 3,776 வேட்பாளர்கள் ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,454 பேர், பெண் வேட்பாளர்கள் 320 பேர், திருநங்கைகள் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே நகரில் அதிகபட்சம்
அதிகபட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்து அரவக்குறிச்சில் 36 வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால் பணப்பட்டுவாடா புகாரால் அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு மே23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் எத்தனை?
தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கையை பொருத்தமட்டில், 5.82 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்களில் 2.88 கோடி பேரும், பெண்களிலும் 2.93 கோடி பேரும் உள்ளனர். திருநங்கைகள் 4,720 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.02 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் வாக்களிக்க முதல் முறையாக தகுதி பெற்ற வாக்காளிர்களின் எண்ணிக்கை 21.05 லட்சம் பேர் ஆவர்.
வாக்குச்சாவடிகள் எத்தனை?
234 தொகுதிகளுக்கு 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில். 5,417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 1,233 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானதை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்கான 27,961 வாக்குச்சாவடிகளிள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு இயந்திரங்களின் தேவை
சட்டமன்றத் தேர்தலில் 1.40 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 1.50 லட்சம் மின்னனு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளா - புதுவையிலும்
இதேபோல கேரளா, புதுச்சேரியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் 140 தொகுதிகளில், 1203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுவையில் 30 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.