சென்னை வந்தார் குடியரசு தலைவர்.. விமான நிலையத்தில் முதல்வர் வரவேற்பு.. முப்படை அணிவகுப்பு மரியாதை!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்ற குடியரசுத் தலைவர் ராமநாதசாமி கோவிலில் தனது மனைவி மற்றும் மகளுடன் சாமி தரிசனம
சென்னை: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தனது மனைவி மற்றும் மகளுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை மாதம் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இந்நிலையில் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக இன்று தமிழகம் வந்துள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ராமநாதசாமி கோவிலில் தரிசனம்
மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார் குடியரசுத் தலைவர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குடியரசுத் தலைவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பாதுகாப்பு வளையத்தில்..
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்பகுதியும் கண்காணிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் வருகையால் ராமேஸ்வரம் பகுதி பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
கலாம் நினைவிடத்தில் மரியாதை
இதைத்தொடர்ந்து பகல் ஒரு மணியளவில் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். அப்துல்கலாமின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.
முப்படைகளின் அணிவகுப்பு
சென்னை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குடியரசுத் தலைவரான பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு சென்னை விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்தியன் என்ஜினியரிங் மாநாடு
மாலை சென்னை கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீரிங் மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அரசியல் பிரமுகர்களை சந்திக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.