பெங்களூரு சிறையில் சசிகலா தீட்டிய சதித் திட்டம்- ரூ2 கோடி லஞ்சம் அம்பலமானதன் பரபர பின்னணி!
பெங்களூரு சிறையில் சசிகலா டெல்லிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாலேயே ரூ2 கோடி லஞ்சம் அம்பலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: பெங்களூரு சிறையில் டெல்லிக்கு எதிராக சசிகலா தீட்டிய சதித் திட்டத்துக்கு செக் வைக்கும் வகையில்தான் ரூ2 கோடி லஞ்சம் கைமாறிய தகவலே அம்பலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களே இருக்கின்றன. அ.தி.மு.க அம்மா அணியின் எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓபிஎஸ்ஸும் தங்கள் ஆதரவை முன்கூட்டியே பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டனர்.
பாஜகவுக்கு ஆதரவு
எடப்பாடி அணியின் 122 எம்.எல்.ஏக்களும் ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏக்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான், சசிகலா குடும்பத்தின் மீதான கூடுதல் நடவடிக்கைகளை ஓரம்கட்டி வைத்திருந்தது டெல்லி. ஆனால் அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளால் அதிர்ந்து போனவர்கள், சிறையிலேயே சசிகலாவுக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தினகரன் வியூகம்
அண்மையில் சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன், ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி பாஜகவை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதேநேரத்தில் சசிகலாவை சந்தித்த தம்பிதுரையும் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
தம்பிதுரையிடம் பேரம்
ஆனால் சசிகலாவோ, வழக்கு தொடர்பாக சட்டரீதியான உதவிளைச் செய்யச் சொல்லுங்கள்.. பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பியிருக்கிறார். தம்பிதுரையும் கிளிப்பிள்ளை போல டெல்லியில் அப்படியே போய் சொல்லியிருக்கிறார்.
ஆட்டம் காட்டிய தினகரன்
இந்த நிலையில் திடீரென தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்திப்பது தொடர் கதையாக விஸ்வரூபமெடுத்தது. 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனின் பிடியில் இருப்பதை உறுதி செய்து கொண்டது டெல்லி.
இதுதான் காரணமாம்
தினகரன் ஆதரவு 30 எம்.எல்.ஏக்களும் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்கலாம் என்பது டெல்லியின் சந்தேகம். இதனால் கோபமடைந்த டெல்லி சசிகலா தரப்புக்கு நெருக்கடி தரும் வகையில் பெங்களூரு சிறை முறைகேடுகளை டிஐஜி ரூபா மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறதாம்.