ஓணம் பண்டிகை: 100 டன் பூக்கள் விற்பனை; காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகையையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் 100டன் பூக்கள் விற்பனையானது. ரூ.2 கோடி மதிப்புள்ள பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தோவாளை மலர்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் இருந்து தினசரி 1000 டன் காய்கறிகள் வரை கேரளாவிற்கு விற்பனையாகிவருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
கேரள மாநிலத்தின் முக்கிய விழாவான திருவோணம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (செப். 7) கொண்டாடப்படுகிறது. பத்துநாள் பண்டிகையான ஓணம் குமரி மாவட்டத்தில் தற்போது களைகட்டியுள்ளது.
பூக்கள் விற்பனை
ஓணம் பண்டிகை பூக்கள் விற்பனையில் கேரள வியாபாரிகளும் பங்கேற்றதால் விழா களை கட்டியது. குமரி மாவட்டம் தோவாளையில் ரூ.2 கோடி மதிப்புள்ள பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தோவாளை மலர்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
அறுசுவை விருந்து
ஓணம் பண்டிகை நாளில் கேரள மக்களின் ஓண சத்யா என்ற அறுசுவை உணவு சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த உணவில் அவியல், கிச்சடி, பச்சடி, இஞ்சி, அப்பளம், அடை பிரதமன் என்ற அடை பாயாசம் உள்ளிட்டவை முக்கிய இடம்பெறுகிறது.
காய்கறிச் சந்தையில்
ஓணம் பண்டிகையையொட்டி களியக்காவிளை காய்கனி சந்தை மற்றும் கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது. காய்கனிகளின் தேவை அதிகரித்ததையடுத்து அவற்றின் விலைகள் இரு நாள்களாக உயர்ந்துள்ளது.
கடைகளில் கூட்டம்
கேரளத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்த வகையில் பலசரக்கு கடைகள், துணிக்கடைகளில் கடந்த சில நாள்களாக கூட்டம் அதிகரித்துள்ளது.
மலிவு விலைக்கடைகள்
பாறசாலை, உதியங்குளங்கரை, நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் உள்ளிட்ட கேரள பகுதிகளில் கேரள அரசு சார்பில் மலிவுவிலை கடைகள் திறக்கப்பட்டு காய்கனிகள், பலசரக்கு பொருள்கள் உள்ளிட்டவை மலிவு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரேசன் கடைகளில் அரிசி
மேலும் ஓணம் பண்டிகையையொட்டி கேரள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முக்கிய பங்கு
பொதுவாக கேரள மாநிலத்துக்கு தேவையான ஒட்டுமொத்த காய்கறி, பூக்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன. தற்போது ஓணம் பண்டிகை என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக காய்கறிகள், பூக்கள் அனுப்பப்படுகின்றன.
ரூ.2 கோடி காய்கறிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து கடந்த 3 ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை ஓணத்தையொட்டி 1000 டன் காய்றிகள் வீதம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகள் விலை உயர்வு
தக்காளி, கொத்த வரைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், வெங்காயம், மாங்காய், நெல்லிக்காய் ஆகியவை தற்போது கேரளத்துக்கு அதிக அளவு அனுப்பப்படுவதால் இவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.