'இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன'... இப்படி ஆகிப் போச்சே பாஸ் நம்ம தீபாவளி!
சென்னை: இன்னும் ஒரு வாரம் கூட இல்லை தீபாவளிக்கு. ஆனால், தீபாவளியை எல்லா மக்களும் மகிழ்ச்சியாகத் தான் எதிர்நோக்கியுள்ளார்களா என்ற மிகப்பெரிய கேள்வி நம் முன்னே உள்ளது.
அதற்குக் காரணம் அடுக்கடுக்கான பிரச்சினைகள். பண்டிகைகள் நம்மை மகிழ்விக்கக் கூடிய காலம் போய், ஏன் தான் பண்டிகைகள் வருகிறது என மக்களை யோசிக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இன்றைய சமூகமும், அதில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களும்.
தீபாவளி என்றாலே புத்தாடைகள், விதவிதமான பலகாரங்கள், பட்டாசு என்பது இன்றியமையாதது. ஆனால், இவை அனைத்தும், அனைவரையும் சென்றடைகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
பருப்பா... நெருப்பா?
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான பருப்பு விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் கூறப்பட்டாலும், பாதிக்கப்பட்டது என்னவோ அடித்தட்டு மக்கள் தான்.
என் வடை தான்... எனக்கு மட்டும் தான்
தீபாவளிக்கும், பொங்கலுக்கும் இட்லி சுட்டு, வடை சாப்பிட்ட பரம்பரையில் வந்த நாம், இன்று பருப்பு என்பதை எழுதித்தான் படிக்க முடிகிறது. அப்படியே எண்ணி எண்ணி வடை சுட்டாலும், சுற்றத்தாருக்கு பலங்காரங்களை பகிர்ந்தளிக்க முடிகிறதா நம்மால்.
திகில் கிளப்பும் பட்டாசுகள்...
பருப்பு தான் நெருப்பாக சுடுகிறது என்றால், நெருப்பு மூட்டி வெடிக்க வேண்டிய பட்டாசுகள் வேறு விதத்தில் திகில் கிளப்புகின்றன. சீனப் பட்டாசுகளால் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்ற எச்சரிக்கை யாரையும் இந்தத் தீபாவளிக்கு நிம்மதியாக பட்டாசு வெடிக்க விடாது போல.
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன...
அதிலும் சீனப்பட்டாசுகளை வெடித்துப் பார்த்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும் எனக் கூறப்படுகிறது. வெடித்துப் பார்த்தபின் வித்தியாசம் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன. இது கவுண்டமணியின், ‘இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன' காமெடி போல் உள்ளது.
சுருளிராஜன் ஸ்டைலில்...
பேசாமல் பட்டாசிற்குப் பதில் பேப்பர்களை மடித்து டப் டுப் என சத்தம் எழுப்பி பட்டாசு வெடித்ததாக மகிழ்ந்து கொள்ளுங்கள் என விழிப்புணர்வு விளம்பரங்கள் கூறுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு என பேப்பரில் எழுதியதைப் பார்த்து பசியாற்றிக் கொள்ளுங்கள் என்பார்கள் போல.
யானை விலை...
சரி பட்டாசுக்குத் தான் வேட்டு வைத்து விட்டார்கள், மனதார புது உடையாவது வாங்கலாம் என்றால், நடிகர்கள் கூவி கூவி அழைக்கும் துணிக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளிலும் யானை விலை, குதிரை விலை.
நினைத்தாலே கசக்கிறது...
சாமானிய மக்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆடைகளின் விலை ஏறிக் கிடக்கிறது. மிகச் சாதாரண உடை வாங்க வேண்டும் என்றால் கூட ஆயிரம் ரூபாய் தேவைப் படுகிறது.
இப்டி பண்ணிட்டியே கடவுளே...
இந்த நிலையைப் பார்க்கும் போது, சமீபத்தில் படித்த சில வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. ‘தீபாவளி செலவுகளைப் பார்க்கும் போது, கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசுரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது'.